மத்தியில், ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், பாஜக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மத்திய பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், கடன் உதவிகள், நிதி ஒதுக்கீடுகள், தூய்மை பாரதம் திட்டம், முத்ரா திட்டம், ஜன்தன் யோஜனா, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பொருளாதாரத்திற்கான முன்னெடுப்புகள், ஜிஎஸ்டி, மீனவர்கள், சிறு வணிகர்கள், குறு வணிகர்களுக்கான கடன் உதவிகள் உள்ளிட்ட பல திட்டங்களை குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, கரோனா நெருக்கடி காலத்தில் குடிபெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவங்களை, பாஜக அரசின் இரண்டாம் ஆண்டு தொடக்க காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியாக கருதலாமா என செய்தியாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.