தமிழ்நாடு

tamil nadu

‘குடியுரிமை சட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது’

By

Published : Feb 20, 2020, 2:22 PM IST

Updated : Feb 20, 2020, 2:32 PM IST

தூத்துக்குடி: குடியுரிமை சட்டத்தை வைத்து அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

opposite party don't use CAA for their political gain - GK Vasan
opposite party don't use CAA for their political gain - GK Vasan

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி வந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சிவந்தி ஆதித்தனாருக்கு அவருடைய சொந்த ஊரான வீரபாண்டிய பட்டணத்தில் தமிழக அரசு மணிமண்டபம் எழுப்பி, அதை வருகிற 22ஆம் தேதி திறக்கவுள்ளது வரவேற்கத்தக்கது. பத்திரிகைத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி பல சாதனைகளை புரிந்த அவருக்கு மணிமண்டபம் அமைத்து அதன் திறப்பு விழாவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்பது சிறப்புக்குரியது. இதை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை சட்டம் தொடர்பான சந்தேகங்களை மத்திய அரசு மேலும் மேலும் விளக்கிட வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பான இஸ்லாமிய மக்களின் போராட்டம் ஏற்புடையது என்றாலும், அவர்களின் நியாயமான சந்தேகங்களை கேட்டு அதை தீர்க்க வழி செய்திட வேண்டும். போராடவும், உரிமையை கேட்டு பெறவும் இஸ்லாமியர்களுக்கு இடமுள்ளது. அதேநேரத்தில் குடியுரிமை சட்டம் தொடர்பான சந்தேகங்கள் மீது வதந்திகளை சேர்த்து பரப்பி பிரச்னையை பெரிதாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக்கூடாது. ஆக்கப்பூர்வமான முறையில் இஸ்லாமிய மக்களின் உணர்வினை புரிந்துகொண்டு அவர்களின் சந்தேகத்தினை தீர்ப்பதற்கு வழி செய்யவேண்டும்.

விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்த்து தமாகா நிச்சயம் குரல் கொடுக்கும். பயிர்களை நாசம் செய்து, திட்டத்தை செயல்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும். காவிரி டெல்டா பகுதிகளை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்திருப்பது விவசாயிகளின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி வைத்துள்ளது. விரைவில் அதை சட்டமாக்குவதற்கான முயற்சிகளை அரசு எடுக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு, விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக செயல்படுகிறது. அதிமுகவின் இந்த மூன்றாண்டு கால ஆட்சி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. அதிமுக, தமாகா கூட்டணி பலமாக உள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட்டணியோடு இணைந்து வெற்றிகளை பெற்றுத் தர பாடுபடுவோம்.

குடியுரிமை சட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் கைவிடப்பட்ட சுங்கச்சாவடியில், பாஸ்டேக் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, வசூல் செய்யும் கட்டணத்தில் சாலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Last Updated : Feb 20, 2020, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details