தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கிராமத்தின் க(த)ண்ணீர் கதை!

2000ஆம் ஆண்டில் மக்கள் தொகை 1,269ஆக இருந்த மீனாட்சிபுரம் கிராமத்தில் தற்போது மக்கள் தொகை ஒன்றே ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு மக்கள் அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறக் காரணம் என்ன? யார் ஊரைவிட்டு போனாலும் நான் போகமாட்டேன் என வைராக்கியத்துடன் அக்கிராமத்தில் தற்போதும் வசித்துவரும் அந்த ஒற்றை நபர் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

By

Published : Jul 2, 2021, 1:30 PM IST

Updated : Jul 2, 2021, 9:36 PM IST

only-one-old-man-lived-in-a-village-in-meenakshipuram-thoothukudi
ஒரு கிராமத்தின் க(த)ண்ணீர் கதை!

தூத்துக்குடி:சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது, மீனாட்சிபுரம் கிராமம்.

2000ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. ஆனால், தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்று தான். மற்றவர்களெல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் மக்கள் ஊரை காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரத்தில் களம் கண்டது ஈடிவி பாரத்.

'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரன்' - க(த)ண்ணீர் கதை!

ஊர் வரவேற்பு

தூத்துக்குடியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. பொங்கல் பண்டிகைக்கு ரேக்ளா போட்டி நடத்தும் புகழ்பெற்ற ஊர்.

செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, கீழச்செக்காரக்குடி என நான்கு புறமும் பரந்து கிடக்கும் இந்த ஊரிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிக்கிறது, அந்த சாலை. மேல செக்காரக்குடியிலிருந்து சிறிது தொலைவிலேயே வலதுபுறத்தில் வடக்கு நோக்கிப் பாய் விரிக்கிறது, மீனாட்சிபுரம் சாலை.

வழியெங்கும் மானாவாரி பயிர்களுக்கு இடையே கிராமத்தின் வாசலை நோக்கி பயணித்தால் 3 கி.மீ. தொலைவில் அந்த பாலைத் தீவைக் காணலாம்.

சிதலமடைந்த நிலையில் உள்ள வீடு

உச்சி வெயில் உளியாய் இறங்கும் நேரத்தில் வந்து சேர்ந்தோம், மீனாட்சிபுரத்திற்கு. திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், காரைக்கட்டி வீடுகள், சுண்ணாம்பு வீடுகள், கூரை சாய்ப்பு, ஓட்டு சாய்ப்பு, அடுக்குத் தட்டு வீடுகள் என அடுத்தடுத்து அநாதையாகி கிடக்கிறது, அந்நிலம்.

அனைத்தும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே அத்துவிட்ட பட்டம் போல கயிறே இல்லாமல், காற்றில் ஊஞ்சலாடி கொண்டிருக்கின்றன. சிலவை காற்றின் தலைக்கோதலுக்காக தன் கூரையை தரையில் தாழ்த்திக்கிடக்கிறது. அடிக்கிற காற்றுக்கு அம்மியென்ன அதற்கும் ஒருபடி மேலாய் ஆட்டு உரலும் நகரும் போல. அதுவும் பொது தண்ணீர் குழாய் பக்கத்தில் பரிதவித்துக் கிடந்தது.

ஒற்றை மனிதருக்காக சுவாசிக்கும் நிலம்

குழந்தைகள் துள்ளித்திரிந்த கல்விச்சாலை தற்போது குளவிகளும், குண்டர்களும் தங்குமிடமென மாறியுள்ளது. இதுதான் அந்த ஊரை வரவேற்கும் முதல் எச்சங்கள்.

மக்கள் கூடிக்களித்த பொது தொலைக்காட்சி அறை, தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சித்தரும் அறையாகத்தான் பெயருக்கு இன்னமும் இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி மவுனியாக நிற்கிறது, மீனாட்சிபுரம்.

ஆனாலும், எஞ்சியிருக்கும் ஒரு மனிதருக்காக இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது, அந்த கரிசல் நிலம். ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் இளைப்பாற அமர்ந்திருந்த மயில்கள் 'றெக்கை' படபடக்க பறந்து போனது மட்டுமே இன்றைக்கும் அந்த கிராமத்தின் ரம்மியம் குறையாத காட்சிக்கு உயிர்ப்பூட்டியது.

கந்தசாமி வசிக்கும் வீடு

ஊரின் முகப்பிலிருந்து வலது - இடதாய் பிரியும் இரு வழிகளில் வலதோரம் கடைசியில் உள்ள ஒரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களைக் கொண்டு நிற்கிறது. இந்த கிராமம் இன்னமும் வரைப்படத்தில் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தா, அந்த மனிதர் தான்.

பரதேசி நாயக்கர்

அவர்தான் 70 வயதான கந்தசாமி என்ற பரதேசி நாயக்கர். தளர்ந்த நடை, காவி உடை என வயோதிக மாற்றத்தை ஏந்திய அந்த மனிதரே, அந்த ஊரின் மாமனிதர். வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பிய வாளி, தலையணையுடன் கூடிய கட்டில் படுக்கை, டிவி, மிக்ஸி, அவசரத் தேவைக்கு இருசக்கர வாகனம், ஆபத்துக்கோ, அடுப்பறைக்கோ ஒரு அரிவாள், இளமை கதை சொல்லும் ரேக்ளா வண்டி, அன்புக்கு நாய், ஆசைக்கு ஒரு பூனை என அந்த ராஜகுமாரனின் வீடு நம் கேமராவோடு நின்று பேசியது.

ஒற்றை ஆளாய் ஊர் காக்கும் காவல்காரன் கந்தசாமியிடம் பேசத் தொடங்கினோம், கிராமத்தின் நினைவுகளை ஏக்கம் கலந்த புன்முறுவலுடன் ஆரம்பித்தார் அவர். "சொந்தபந்தங்களோடு, சொத்து சுகங்களோடு, குழந்தைகள் சிரிப்பு சத்தத்தோடு, தினம் தினம் நிறைந்த பண்டிகையோடு இருந்த கிராமம்தான் இந்த மீனாட்சிபுரம்.

300 ஆண்டுகள் வரலாறு

சுமார், 300 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்தார்கள். என் தாத்தா, அப்பா, நான் உள்பட எல்லோருமே இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். 7 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட, இங்கு 5 குடும்பங்கள் இருந்தன.

ஆனால், இப்போதுதான் இந்த இடம் இப்படி மாறிவிட்டது. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள் என சகலத்தையும் பார்த்த இந்த ஊர் இப்ப தனித்தீவாக மாறிக்கிடக்கிறது. மக்கள் எல்லோரும் ஊரைக் காலி செய்ததற்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததுமே.


எங்கள் கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செய்தது.

மழை பொய்த்தால், ஊர் பஞ்சம் ஆகிவிட்டது. 10 ஆண்டுக்கு முன் வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்கள் வாழ்வாதாரம் பரவாயில்லாமல் இருந்தது.

பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை குறைவானது. அதனால் விவசாயம் பொய்த்துப் போனது. குடிநீருக்காக இங்கிருந்து 5 கி.மீ. செக்காரக்குடிக்கும், சொக்கலிங்கபுரத்துக்கும் நடந்துசென்று நீரை சுமந்து கொண்டு வருவோம்.

கந்தசாமி

பேருந்து வசதி கிடையாது. மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.

அதுதான் இங்கே இருந்து ஒவ்வொருவரும் ஊரை காலி செய்ய ஆரம்பித்தற்கான முதற் சம்பவம். சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு போனவர்கள்தான் இன்னமும் திரும்பி வரவே இல்லை. மழை பெய்து ஊர் செழிப்பானால் திரும்ப வந்திடலாம் என்ற நம்பிக்கையில் போனவர்கள்கூட இங்கே வராதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

'சாகுற வரை இங்கதான் இருப்பேன்'

இப்போது 5 வருடமாக நான் மட்டும்தான் இந்த ஊரில் இருக்கிறேன். எனக்கு இந்த ஊரை விட்டுப் போக மனது வரவில்லை. நான் செத்தாலும் இந்த கிராமத்திலேயே வாழ்ந்து சாகணும்னு வைராக்கியத்துலதான் இங்கே இருந்து போகவில்லை.

சிதலமடைந்த தொடக்கப்ள்ளி

தங்களோடு வந்து தங்கியிருங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று எனது மகள், மகன் உள்பட மருமகள்கள் எல்லாரும் கூப்பிட்டபோதும் இந்த கட்ட.... இந்த இடத்தை விட்டு எங்கேயும் நகராதென்று ஆணித்தரமாக சொல்லிவிட்டேன்.

பேரப்பிள்ளைகள் எல்லாம் என்னைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களே வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள். அதுதான் எனது சந்தோசம்.

எனக்கு எனது இளைய மகன் மாதம் ரூ‌.2,000 செலவுக்கு தந்து உதவுகிறான். அதை வைத்துத்தான் காலத்தை கடத்தி வருகிறேன். முன்னே இருந்தது போல இந்த ஊரை மக்கள் மனுசங்களோடு வாழனுமென்று மனசுக்குள் ஆசை பூத்துக்கிடக்கிறது.

ஆனால், இங்கிருந்து வேலைக்காக வெளியூர் போய் தங்கியிருந்து பிழைப்பு பார்த்தவர்கள் கூட தற்போது அங்கேயே வீடு, வாசல் வாங்கி தங்கிவிட்டதால் இங்கே வரவில்லை.

வைகாசி கொடைக்கு களைகட்டும் ஊர்

வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதம் இங்குள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் கொடை விழா நடக்கும். அந்த கொடை விழாவுக்கு மட்டும்தான் இங்கிருந்து போனவங்க எல்லாரும் திரும்பி வருவார்கள்.

3 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவுக்கு இரண்டாம் நாளில்தான் இந்த ஊரில் வாழ்ந்த மக்களெல்லாம் குடும்பம் குட்டியோடு வருவார்கள்.

அப்படி வருகிறவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வீட்டருகே பந்தல் அமைத்து கொடுத்து விடுவோம். இரவெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு மகிழ்ச்சியா கொடை விழா நடக்கும்.

தன் தாத்தா, அப்பா வாழ்ந்த இந்த கிராமத்தைப் பற்றி அவர்கள் பேசிக் கேட்பதுண்டு. மூன்றாம் நாள் கொடையில் கறி சோறு விருந்துடன் விழா முடிந்ததும் அவரவர் இங்கிருந்து சென்று விடுவார்கள்.


இனி அடுத்த வைகாசி கொடைக்குத்தான் அவர்களைச் சந்திக்க முடியும். நானிருக்கும் காலம்வரை ஆண்டுக்கு ஒருமுறை அவர்களை இங்கே வரவழைக்கவும், அம்மனுக்கு கொடை விழா தடைபடாமல் இருக்கவுமே நான் என் மூச்சை பிடித்துக்கொண்டு கோயில் தர்மகர்த்தாவாக எல்லா பணிகளையும் செய்தேன்.

ஆனால், கடந்த சில ஆண்டாக உடல் நிலை ஒத்துழைக்காததால் எனது பொறுப்பை என் மகன் பாலா தான் ஏற்று செய்கிறான்.

மக்கள் வெளியேறியதற்கு அரசு காரணம்

மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடிதண்ணீர், சாலை வசதினு எதுவும் செய்து தரவில்லை. இப்போ இந்த ஊரில் மேல்நிலை நீர்த்தேக்கம் தெருக்குழாய், அடிபம்பு, தெருவிளக்கு வசதிகளை செய்து கொடுத்திருக்காங்க. ஆனால், இதுவும் இப்போ பேருக்குதான் இருக்கு.

இதை முன்னாடியே செய்திருந்தால் மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டார்கள். இப்ப எல்லாரும் மறுபடியும் திரும்பி வருவார்கள் என நினைப்பது கானல் நீர் காண்பது மாதிரிதான் இருக்கிறது.


மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தாலும் வாழ்வாதாரத்துக்கு வழி வேண்டுமே, அதுக்கு என்ன வழியென்று யோசிக்கும்போதுதான் இந்த ஊருக்கு யாரும் வரமாட்டோம் என்று சொல்கிறார்கள்.

ரேக்ளாவும் தாத்தாவும்

என் மனைவி வீரலட்சுமி 15 வருடத்துக்கு முன்பே இறந்துவிட்டாள். எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள். எல்லாமே இறைவன் புண்ணியத்தில் நல்ல நிலைமையில் இருக்கின்றனர். அதனால் எனக்கு எந்த கவலையுமில்லை. வீட்டின் பின்புறத்தில் உள்ள ரேக்ளா வண்டியை, விற்றிட முடிவு செய்து விலைபேசினேன்.

என் மகன்தான் வேண்டாமென்று தடுத்துவிட்டான். மாட்டு வண்டிகளும், மைனர்களும் வலம் வந்த ஊரில் இன்றைக்கு வண்டு வந்து உட்கார்ந்தா கூட எனக்கு அது ஆச்சர்யமாகத்தான் தோன்றுகிறது.

அந்தக்காலத்தில மீனாட்சிபுரம் நாயக்கர் மாட்டுவண்டி கட்டி வெளியூர்போக வருகிறாருனு தெரிஞ்சா பக்கத்தில் இருக்கிற ரெயில் நிலையத்தில்கூட ரெயில் வண்டி இரண்டு நிமிடம் நின்று செல்லும்.

அந்த அளவு செல்வாக்கான ஊர் இந்த மீனாட்சிபுரம். இங்கு, பலதரப்பட்ட சாதி மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தோம்' என அசைபோடுகிறார் அந்தப் பெரியவர்.


ஒரு நபர்தான் என்றாலும் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை என எல்லாம் கந்தசாமி தாத்தாவுக்கு இருக்கிறது.

'குடிநீரெல்லாம் இப்போ இந்த கிராமத்துக்குத் தருகிறார்கள். ஆனால், நல்ல வேலையில் இருக்கிறவர்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்த்துப் பிழைக்க இனி இங்கே வருவார்களா?’ என ஏக்க பெருமூச்சு விடுகிறார் கந்தசாமி.

'ஐயா வரமறுத்துட்டார்'

மீனாட்சிபுரம் கிராமத்தை விட்டுச்சென்ற கந்தசாமியின் மகன் பாலாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது,' இப்போது நான் காசிலிங்கபுரத்தில்தான் மனைவி மற்றும் புள்ளைகளோட வசித்து வருகிறேன். காற்றாலை நிறுவனத்தில் கௌரவமான வேலையில் இருக்கிறேன்.

எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளிக்கூடத்தில்தான் நான் 5ஆம் வகுப்புவரை படித்தேன். ஊரைவிட்டு எல்லோரும் போன பிறகு எங்க ஐயாவையும் வாங்க நாமும் எங்கேயாவது போயிடலாம்னு கூப்பிட்டேன். ஆனால், எங்க ஐயா வர மறுத்துவிட்டார்.


அதனால் ஐயாவ அப்பப்போ வந்து பார்த்துட்டு தேவையானதை வாங்கி கொடுத்துவிட்டு செல்வேன்.

எனக்கு நினைவு தெரிஞ்ச வரையிலும் எங்கள் கிராமத்தில் நல்லா தான் தண்ணீர் வசதி இருந்தது. பருவமழை பெய்தால் கயத்தாறுக்கு வடக்கே இருந்து வரும் காட்டாற்று தண்ணீர் பூவானி வழியாக எங்கள் ஊருக்குதான் வரும்.

பின்னே அந்த தண்ணீர் செக்காரக்குடி வழியாக கோரம்பள்ளம் குளத்துக்கு போகும். இப்படி பெரிய நீர்வழித்தடம் இருந்த ஊர்தான் எங்க கிராமம். ஆனால், இன்றைக்கு அதற்கான தடமே இல்லை. நிறைய மக்கள் தண்ணீர் இல்லாமல்தான் ஊரைக் காலி செய்தனர்.

அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை

இன்றைக்கு எங்க ஐயா போன் போட்டு சொன்னா அந்த ஒத்த மனுஷருக்காக தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடுறாங்க. ஆனால், இன்னமும் அந்த ஊருக்கு சரியான முறையில் மின்வசதி செய்து கொடுத்து குடிநீர் இணைப்பு வழங்கி மக்களைத் திரும்ப அழைச்சிட்டு வர அரசாங்கம் தரப்புல எந்த முயற்சியும் எடுக்கல.

ஒரே ஒரு ஆளாக இருக்கிற நினைப்பிலோ என்னவோ அவருக்கு முதியோர் உதவித்தொகைகூட அரசாங்கம் தரப்பிலிருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுக்காக எங்க ஐயா அலைஞ்சு தேய்ஞ்சதுதான் மிச்சம். ஏன்னா அந்த உதவித்தொகையை வாங்கி கொடுப்பதற்குக்கூட எங்க ஊருக்குள்ள ஒரு அரசுப் பணியாளர் உள்ளே வரணும்ல.

சாலை இல்லாத இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைக்கவே, அவங்க இவ்ளோ யோசிக்கும்போது எங்க ஐயா காலத்துக்கும் இங்கேயே கிடந்து சாகணும்னு நினைக்கிறார்" என தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.

இது மீனாட்சிபுரத்தின் கண்ணீர் கதை மட்டுமல்ல, கடைசி கதையும்கூட. கந்தசாமி இருக்கும்வரை மீனாட்சிபுரம் இருக்கும்.

மீனாட்சிபுரம் எப்போதுவரை இருக்கும் என்பது அரசின் கையில்தான் உள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கிராமப்புறத்துக்கும் அரசு கொடுக்க வேண்டும்.

இப்படி பல 'மீனாட்சிபுரங்கள்' தொலைந்தால் காந்தியின் கிராம ராஜ்ஜியமும் கனவாகி தான் போகும்.

இதையும் படிங்க:பாவளி: மகிழ்ச்சியுடன், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் வவ்வால்தோப்பு கிராமத்தின் கதை!

Last Updated : Jul 2, 2021, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details