முழு ஊரடங்கு அறிவிப்பையொட்டி, பொது இடங்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்ப்பதற்காக நடமாடும் காய்கறி விற்பனை சேவையை கனிமொழி எம்பி இன்று (மே.23) தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடமாடும் காய்கறி விற்பனை சேவை தொடங்கி வைப்பு! பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, "கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருள் தேவைக்காகப் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக, நடமாடும் காய்கறி வாகன சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் இருக்கும் இடங்களுக்கே நேரடியாகச் சென்று காய்கறி, மீன், இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவையைக் கொண்டு சேர்ப்பதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் 9,262 மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்த உள்ளோம்" என்றார்.