தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2023, 1:51 PM IST

ETV Bharat / state

மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா: கனிமொழி பேச்சு

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாவலராக எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் நின்று கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார்.

மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா - கனிமொழி பேச்சு
மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா - கனிமொழி பேச்சு

தூத்துக்குடி: கத்தோலிக்க மறை மாவட்டம் கடந்த 1923ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் கீழ் 118 பங்குகள் உள்பட 4.75 லட்சம் இறை மக்கள் உள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நேற்று (ஜூன் 10) தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள சின்னகோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “சமய, சமூக நல்லிணக்க விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என ஒரு கூட்டம் பல்வேறு சதித் திட்டங்களை செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் என்னால் எழுத முடிகிறது, பேச முடிகிறது என்றால், அது மறை மாவட்டப் பள்ளிகளால் என்று பெருமையாக சொல்ல முடியும். நான் படித்ததுகூட ஒரு கிறிஸ்தவப் பள்ளியில்தான்.

மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகூட கிறிஸ்தவப் பள்ளியில்தான் படித்தார். மேலும், என்னுடன் பல்வேறு மதத்தைச் சேர்ந்த மாணவிகள் படித்தார்கள். ஆனால், ஒருவர் கூட மதம் மாறவில்லை. படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரின் கொள்கைகள் பிடித்து மதமே வேண்டாம் என பெரியாரின் வழியை தேர்ந்தெடுத்தது நான்தான்.

அங்கே படித்தவர்கள் யாரும் மதம் மாறவில்லை. அதன் பின்பும் மதம் மாறவில்லை. ஒரு சிலர் பொய் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். 18 சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு உடலை மறைத்துக் கொள்ள உரிமை இல்லாமல் இருந்தது.

அந்த பெண்கள் 'தான் என்ன உடுத்துவேன்' என தான் தீர்மானிப்பேன், தான் மேலாடை அணிவிக்க தடுக்கக் கூடாது என போராடிய நேரத்தில், அவர்களோடு உறுதுணையாக இருந்தது கிறிஸ்தவ திருச்சபைதான். பெண்களின் சுதந்திரத்திற்காக உரிமைக் குரலோடு உடன் இருந்தது திருச்சபைகள்தான்.

ஒரு காலகட்டத்தில் எல்லோரும் படிக்க முடியாத சூழ்நிலையில் எல்லோரும் படிக்கலாம் என்பதை உருவாக்கியது திருச்சபைகள்தான். அதிலும், பெண்கள் கல்வியை அதிகம் ஊக்கப்படுத்தியது திருச்சபைகள்தான். இந்த திருச்சபை தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.

இதே நேரத்தில் திமுகவின் தலைவர் கருணாநிதியின் நூறாவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சமூக நீதியை கருணாநிதி தன் வாழ்க்கையில், சமூக நீதிக்காக தனது வாழ்க்கையாக கொண்டாரோ, அதேபோல் தங்கள் மறை மாவட்டத்தையும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் நீங்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டின் பாதுகாவலராக எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுடன் நின்று கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டேன் சுவாமி என்ற கிறிஸ்தவ பாதிரியார், தனக்கு 90 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்.

அவர்களுடனே வாழ்ந்தவர் என்பதால், அவர்களை மிரட்டுவதற்காக மத்திய அரசு ஸ்டேன் சுவாமியை கைது செய்தது. 90 வயதான அவரை தீவிரவாதி என பத்திரிகைகள் கிண்டல் செய்தது. மக்களுக்காக போராடக்கூடியவர்கள், மக்களின் நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள்.

யாரும் உரிமை கேட்கக் கூடாது. சமூக நீதியைப் பேசக்கூடாது என்றபோது, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இதனை பேசிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள், இதையெல்லாம் தடுத்து உடைத்து நொறுக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு பயப்படக்கூடியவர்கள் யாரும் தமிழ்நாட்டில் கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போன்று, யார் இந்த நாட்டை நடத்த வேண்டும் என்பதைத் தாண்டி, யார் இந்த நாட்டை நடத்தக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் மனிதர்களாக வாழ வேண்டும். சகோதர, சகோதரிகளாக எல்லோரையும் மதிக்கக் கூடியவர்களாக வாழ வேண்டும். அதை உடைக்கக் கூடிய எதுவும் நமக்குத் தேவை இல்லை என தூக்கி எறிய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோட்சே போல மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் மாற மாட்டார்கள்: சபாநாயகர் அப்பாவு

ABOUT THE AUTHOR

...view details