தமிழ்நாடு

tamil nadu

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே காப்பீடு செய்துகொள்ள வேண்டும் - திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

விவசாயிகள் இறுதி நேரம் வரை பிரிமீயம் செலுத்தக் காத்திருக்காமல், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே இத்திட்டத்தில் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

By

Published : Nov 8, 2021, 7:55 PM IST

Published : Nov 8, 2021, 7:55 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர்:சம்பா, தாளடி நெற்பயிர்களின் காப்பீடு திட்டம் பற்றி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி

அதில், 'திருவாரூர் மாவட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரினை காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டுக் கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். சம்பா, தாளடி நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி 15.11.2021 எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களும், இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.

சம்பா, தாளடி மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிர்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, தாளடி நெல் பயிரினைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பிரிமீயம் செலுத்தும் முறை

மேலும், கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலைக் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

இதனையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, விவசாயிகள் இறுதி நேரம் வரை பிரிமீயம் செலுத்தக் காத்திருக்காமல் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் இரண்டாவது நாளாக ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details