தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகார திட்டங்களை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் நீரின்றி வறண்டு பாலைவனமாகும் எனக்கூறி விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது, மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும், டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பால சுப்பிரமணியன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் இஸ்லாமியர்கள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.