திருவாரூர்: பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மறைந்து மூன்றாண்டுகளை நினைவுகூரும் வகையில், மன்னார்குடியில் உள்ள மாநில தலைமையக அலுவல கட்டடத்தில் அவரது உருவப் படத்திற்குத் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாய முறைகளை மீண்டும் நினைவுப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டு நெல் திருவிழா மூலமாக உலகத்தின் பார்வையை ஈர்த்தவர் ஜெயராமன். 174 வகை பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தவர்.
அவருடைய செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்திச் செய்ய வேண்டும் என்கிற உணர்வை உலக முழுமையிலும் ஏற்படுத்தியுள்ளார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல் ஜெயராமன் நினைவாகப் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
அவர் கண்ட கனவு நனவாகும் வகையில் அரசு மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் நெல், சிறு தானிய வகைகள் உள்ளிட்ட விவசாய உற்பத்தி உணவுப் பொருள்களை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவுக் கூடங்களில் கட்டாய உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய விவசாய உற்பத்திப் பொருள்களை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
2020-21ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 190-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு ஜீரோ எனக் கணக்கிடப்பட்டு இதுவரையிலும் இழப்பீடு வழங்க மறுத்துவருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக அனைத்துக் கிராமங்களுக்கும் விடுபடாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.