தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2022, 7:09 PM IST

ETV Bharat / state

ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம்..? பல கோடியை சுருட்டிய தனியார் நிறுவனம்!

50 ரூபாய்க்கு மூக்குத்தி, ஆயிரத்து 500 ரூபாய்க்கு 4 ஆடுகள் என தமிழகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டார் சேவா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனரான ஜெயராமன், மேலாளர் இளவரசி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் இந்நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்களை அணுகி ஐம்பது ரூபாய்க்கு தங்க மூக்குத்தி, புடவை, ஆயிரத்து 500 செலுத்தினால் வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 4 ஆடுகள், 10 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் ஆகியவை வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்த மூன்று மாதத்தில் திட்டத்திற்கான பொருள்கள் கிடைத்துவிடும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளனர். குறிப்பாக இந்த நிறுவனம் என்ஜிஓக்களை குறிவைத்து, இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் ஒரு நபருக்கு நூறு ரூபாய் வீதம் என்ஜிஓக்களின் உரிமையாளருக்கு வழங்கப்படும் எனவும் இதற்கான தனியாக மாத சம்பளம் 35 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு என்ஜிஓ-க்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும், மகளிர் குழுக்களையும் அணுகி இந்த திட்டங்கள் குறித்து கூறியுள்ளனர். 50 ரூபாய்க்கு மூக்குத்தியா என ஆச்சரியத்தில் பலரும் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதே போல் ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால் நான்கு ஆடுகள் கிடைக்கும் என்ற திட்டத்திலும், ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடனுக்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த என்.ஜி.ஓ-க்கள் மூலம் செலுத்தியுள்ளனர்.

ஸ்டார் சேவா பவுண்டேஷன் என்ற இந்த நிறுவனம் மூன்று மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் மட்டுமே என்ஜிஓ-க்களுக்கு கமிஷன் கிடைக்கும் என கூறியதால் டார்கெட் வைத்து ஒவ்வொரு என்.ஜி.ஓ-க்களும் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் வரை இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

ஸ்டார் சேவா நிறுவனம் கொடுத்த மூன்று மாதம் முடிந்த நிலையில் முதற்கட்டமாக ஒவ்வொரு என்.ஜி.ஓ-க்கள் மூலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூக்குத்தியை வழங்கியுள்ளனர். அந்த மூக்குத்திகளை வாங்கிய பொதுமக்கள் சோதனை செய்து பார்த்ததில் அத்தனையும் போலியான மூக்குத்திகள் என்பது தெரியவந்தது. இந்த மூன்று மாதத்திற்குள் என்.ஜி.ஓ- களுக்கு டார்கெட் கொடுத்து கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வைத்த ஸ்டார் சேவா நிறுவனம் அலுவலகத்தை பூட்டிவிட்டு அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், பணம் செலுத்திய பொதுமக்கள் அவரவர் பணம் செலுத்திய என்.ஜி.ஓ-க்களை தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு வருவதால் தமிழகம் முழுவதும் இருந்து என்.ஜி.ஓ-க்கள் பலரும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். குறிப்பாக இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் மோசடி செய்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறையில் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் சேவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜெயராமன், மேலாளர் இளவரசி, மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டதாக கூறி காவல் துறை இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 150கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:“டெஸ்ட் டிரைவ் போறேன்” - சினிமா பாணியில் காரை திருடிய ஆசாமி கைது

ABOUT THE AUTHOR

...view details