தமிழ்நாடு

tamil nadu

‘நிலக்கரி சுரங்கத்திற்கு அரசு இடம் கொடுக்காது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை!

By

Published : Apr 9, 2023, 7:07 PM IST

நிலக்கரி சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நிலக்கரி சுரங்கத்திற்கு அரசு இடம் கொடுக்காது’ - தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
‘நிலக்கரி சுரங்கத்திற்கு அரசு இடம் கொடுக்காது’ - தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

திருவண்ணாமலை:அண்ணா சிலை முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று (ஏப்ரல் 9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6 ஆயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து செயல்பட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இது ஒரு மாவட்டத்தின் பிரச்னை அல்ல; தமிழ்நாட்டின் பொதுவான பிரச்னையாகும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 2 ஆவது பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அதில் முதலாவது மாவட்டம் திண்டுக்கல், 6 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் கொண்டது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் 6 ஆயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

8 சட்டப்பேரவைத் தொகுதிகள், 12 தாலுகாக்களை உள்ளடக்கியது திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 27 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று வரை மாவட்டம் வளர்ச்சி பெறாமல் உள்ளது. நீண்ட காலமாக பெரிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. பெரிய மாவட்டங்களைப் பிரித்தால் மட்டுமே மாவட்டம் வளர்ச்சி பெறும். திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிய மாவட்டங்களைப் பிரிப்போம் என வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டம்போல் கடலூர், திருச்சி, கோவை மற்றும் தூத்துக்குடி போன்ற பல பெரிய மாவடங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆனால், திமுகவின் அமைச்சர்கள் தங்களின் தேவைகளுக்காக மாவட்டங்களில் குறுநில மன்னர்கள்போல் பெரிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஏழை மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

அமைச்சர்கள் அவர்களது சுயநலத்திற்காக பெரிய மாவடங்களைப் பிரித்தால், அதிகாரம் போய்விடும் என அஞ்சி மாவட்டங்களைப் பிரிக்காமல் உள்ளனர். நிலக்கரி சுரங்கம் வராது என மத்திய அமைச்சர் கூறவில்லை. அதற்கு மாறாக ஏல பட்டியலில் இருந்து விலக்கி விடுகிறோம் என்று மட்டுமே ட்வீட் செய்துள்ளார். அதற்குள் எங்களுக்குக் கிடைத்த வெற்றி, எங்கள் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி எனப் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா என நினைத்துக் கொண்டிருக்கிறார், முதலமைச்சர். தமிழ்நாட்டில் 6 நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதலை நிறுத்த வேண்டும் என்றும், 66 ஆண்டு காலமாக என்எல்சி நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் பாதிப்பு போன்ற பல பாதிப்புகள் உள்ளது என சென்னை ஐஐடி குழுவின் மூலம் மூன்று மாதத்தில் ஆய்வு அறிக்கை அரசுக்கு அளித்து, பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

இவை அனைத்திற்கும் தீர்வு வராவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஒரு நாளில் முடியாது. அடுத்தடுத்த போராட்டம் நடைபெறும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து 4 முறை முதலமைச்சரை சந்தித்துள்ளேன். அதேபோல் 6 முறை ராமதாஸ் (பாமக நிறுவனர்) தொலைபேசியின் மூலம் பேசி உள்ளார். ஆனால் ஓராண்டாகியும் எந்த அறிவிப்பும் வரவில்லை. நிலக்கரி சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என சட்டமன்றத்தில் அறிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

எட்டு வழிச் சாலை பிரச்னையை கையில் எடுத்தது, பாமகதான். விவசாய விளைநிலத்தை அழித்து, எட்டு வழிச் சாலை போன்ற வளர்ச்சிகள் வேண்டாம். தமிழ்நாடு ஆளுநர் சட்ட விதிகளை மீறாமல், தனி அரசியலை செய்யாமல், தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உடனடியாக பிரிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் காரணங்கள்?

ABOUT THE AUTHOR

...view details