ஒரு குரோமோசோம் மாறிப் பிறந்த ஒற்றைக் காரணத்திற்காக உலகெங்கிலும் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில், இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தில் மட்டும் மனம் உருக உருக வாழ்த்து தெரிவித்துவிட்டு, அடுத்த நாளே அடிமைப்படுத்த தயாராகும் இந்த ஆணாதிக்கச் சமூகம்.
ஆண்களின் கைகளைப் பார்க்காமல் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலரின் ஒற்றைக் கருதுகோளாக இருந்துள்ளது. ’உரிமையும் விடுதலையும் யாரிடம் கேட்டு பெறுவதில்லை; அது நாம் எடுத்துக்கொள்வது’ என்பதே பெண் சுதந்திரத்திற்கு மிக அவசியமான சிந்தனையாக முன்வைக்கப்பட்டது.
சீழ்படிந்த ஆணாதிக்கச் சமூகத்தில் முதல் கொடுமையாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், கல்வி அறிவைக் கொடுக்கும். அறிவைக் கொடுத்தால் பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். சிந்தித்தால் ஆண்களை எதிர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்துடனே பெண்களை அடக்குவதற்கு ஆணாதிக்கச் சமூகம் கையிலெடுத்த முதல் ஆயுதம் கல்வி மறுப்பு. இதனை கனகச்சிதமாகச் செயல்படுத்தப்பட்டு, அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் அடக்கி ஆளப்படுகிறார்கள்.
இதுதவிர குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, கணவனை இழந்தால் உடன்கட்டை ஏறுதல், பெண்களை வேலைக்குச் செல்லவிடாமல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்தந்த காலகட்டத்தில் எழுந்த சீர்த்திருத்தவாதிகள் சிலர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பி உடன்கட்டை ஏறுதல், தாசி முறை ஆகியவற்றை நீக்கச் செய்தும், பெண்கள் கல்வி கற்கும் வகையிலும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கினர்.
வாழ்நாள் முழுதும் சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்பட்ட தந்தை பெரியார் பெண் விடுதலைக்காக ஆற்றிய பணி இன்றியமையாத ஒன்று. அதேபோல பெண்கள் விடுதலை தனது கனவுகளில் ஒன்றாகக் கருதி தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் பெண்ணியக் கருத்துகளை பாரதியார் வெளிப்படுத்தினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தாசி முறையை ஒழித்தார்.
இதுபோன்ற சீர்த்திருத்தவாதிகள் ஆண்களால் ஒருபோதும் பெண்களுக்கு விடுதலை அளிக்க முடியாது என்ற சிந்தனையை பெண் சமூகத்தின் வேர் வரை பரப்பினார்கள். இவர்களின் சீரிய முயற்சியில் தன்னிச்சையாக பெண்கள் சிந்திக்கத் தொடங்கினர். தன்னெழுச்சியாக எழுந்த பெண்கள் சிலர் சமூகத்தின் பிடியிலிருந்து வெளிவந்தனர்.
உரிமைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற பெண்களும் கல்வியின் அவசியத்தையும், சுய தொழிலின் முக்கியவத்துவத்தையும் உணர்ந்து சமூகத்தில் தங்களுக்கென தனி அந்தஸ்தை பெற முயன்றனர்; முயன்றுகொண்டும் வருகின்றனர். அவ்வாறு உணர்ந்து சுயதொழில் முனைந்து, சாதித்துக் காட்டிய திருவள்ளூர் மாவட்ட சாதனைப் பெண்களைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளரான அனிதா என்பவர் சொந்தமாக தொழில் தொடங்கி, அதன்மூலம் பெண்கள் பலரை ஊக்குவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்துள்ளார்.
அதன்படி, தன் கருத்தை ஒத்த 12 பெண்களை ஒருங்கிணைத்து அரசு சார்பில் நடத்தப்படும் சுயதொழில் பயிற்சிக்காக சமையல் கலை பயிற்சி கற்றுக்கொள்ள திருநின்றவூர் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதி பெண்கள் பாக்கு மட்டைத் தட்டுகள் செய்யும் தொழிலை ஆர்வத்துடன் மேற்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்.