திருவள்ளூர்: மணவாளநகர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் பொன் குமார் தலைமையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன் குமார், விவசாயத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் மாவட்டத்திற்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இடைத் தேர்தல் முடிந்து தற்போது மாவட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த மாதம் மாநில பொதுக்குழு, மாநில தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக நான்கு லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி. அதே போல் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் இரட்டிப்பாக ஆக்குவதற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி. பத்தாண்டு காலம் பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் புத்துயிர் பெற்றது.