திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புழல் ஏரி ஆலமரப் பகுதியில் சமூகப்பணி குழு சார்பாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கு முன்னர் ஏரியைச் சுற்றி 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இக்குழுவினரால் நடப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளால் புழல் ஏரிக்கரையை பசுமையாக்கும் சமூக ஆர்வலர்கள்!
திருவள்ளூர்: செங்குன்றம் புழல் ஏரி கரையில் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர்.
சுமார் நான்கு வருடங்களாக வார இறுதி நாள்களை பல தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றினைத்து புழல் ஏரி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றியும், சீமைக்கருவேல மரங்களை வெட்டியும் புழல் ஏரியின் தோற்றத்தை அழகாக மாற்ற கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், புழல் ஏரியில் பறவைகள் சரணாலயம் மற்றும் பூங்கா அமைக்க ஏதுவாக திட்டங்கள் வகுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை விரைவில் சந்தித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சமூகப் பணி குழு செயலாளர் சமீர் தெரிவித்துள்ளார்.