திருத்தணியை அடுத்து ஆர்.கே. பேட்டை அருகே நாராயணபுரம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு, கடந்த ஒரு மாதமாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்.கே. பேட்டை ஒன்றிய நிர்வாகத்திற்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் காலி குடங்களுடன் திருத்தணி அம்மையார் குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலையில் கற்களைக் கொட்டி மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த ஆர்.கே. பேட்டை காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குடிநீர் கோரி அம்மையார் குப்பம் சாலையில் நடந்த மறியல் போராட்டம் ஆனால், முறையாகக் குடிநீர் வழங்குவதாக அலுவலர்கள் உறுதியளித்த பிறகே நாங்கள் கலைந்து செல்வோம் என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து, ஆர்.கே பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகர் நிகழ்விடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.