திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிக்கைநாதன். இவர், சரஸ்வதி நகர் விரிவாக்கத்திலுள்ள 0.93 சென்ட் நிலத்தை 1998ஆம் ஆண்டு சுந்தராஜன் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். இந்நிலையில், நம்பிக்கைநாதன் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது நிலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, இவருக்குச் சொந்தமான 0.93 சென்ட் நிலத்தில், 0.85 சென்ட் நிலம் வெங்கடேசன், நாகேந்திரன், முருகன் என்ற சகோதரர்களுக்கு எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நம்பிக்கைநாதன், பொய்யாக தனது பேரன்கள் எனக் கூறி சொத்தை அபகரித்துள்ளதாக மூவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரிடமும் விசாராணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், நம்பிக்கைநாதனின் மகன் முத்து எனவும், முத்துவின் மகன் வெங்கடேசன், நாகேந்திரன், முருகன் என போலியாக ஆவணங்களைத் தயாரித்து, நம்பிக்கைநாதனின் சரஸ்வதி நகர் விரிவாக்க சொத்துகளை மகன் முத்து அனுபவித்து வந்ததாகவும், இந்த சொத்தை அவரது மகன்களான தங்கள் மூவருக்கும் எழுதி கொடுத்ததாக போலி பத்திரம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடிய 50 லட்சம் மதிப்பிலான சொத்தை அபகரித்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(57), முருகன்(46) ஆகியோர் கைது செய்யப்படனர். மேலும், போலி ஆவணத்தில் சாட்சி கையழுத்திட்ட புண்னியகோட்டி(46) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் 60 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்பு!