லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சென்னை மணலியில் உள்ள சத்துவா கண்டெய்னர் யார்டில் 2015 முதல் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று (ஆக.9) வெடிபொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன், சுங்கத்துறை அலுவலர், தீயணைப்பு துறை இணை இயக்குநர் ப்ரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதற்கட்டமாக 10 கண்டெய்னர்களில் 202 டன் அமோனியம் நைட்ரேட்டை எடுத்து செல்வதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. ஹைதராபாத்தில் 10 கண்டெய்னர்கள் இறக்கி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தக் கண்டெய்னர்களில் தனியார் பாதுகாவலர்கள், தீயணைப்பு துறையினர், மெக்கானிக் என அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி வழியில் கண்டெய்னர்களை நிறுத்தாதவண்ணம், ஒரு கண்டெய்னருக்கு இரு ஓட்டுநர்கள் என அமர்த்தி பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 27 கண்டெய்னர்களில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெளியேற்றுவது குறித்து உரிய அனுமதி வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என சத்துவா கண்டெய்னர் யார்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.