தமிழ்நாடு

tamil nadu

புழல் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By

Published : May 17, 2023, 4:37 PM IST

புழல் அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த காவாங்கரை, குருசாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர், நிர்மலா. உடல்நலக் குறைவால் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவரது இரண்டு அடுக்கு மாடி வீட்டில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு, தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரை அணுகியுள்ளார்.

கணேசன் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் இஸ்மாயில் என்ற இரண்டு தொழிலாளர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மூவரும் இன்று (மே 17) நிர்மலா வீட்டிற்குச் சென்றுள்ளனர். இவர்கள் மூவரும், வீட்டில் இருந்த கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து சுத்தம் செய்வதற்காக பாஸ்கரன் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது திடீரென இருவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் இருவரும்வெளியே வராததைக் கண்டு அங்கிருந்த கணேசன் புழல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டப் பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலையில் இருந்த 2 தொழிலாளர்களையும் கயிறு கட்டி சடலமாக மீட்டனர். இதனையடுத்து இருவரது சடலங்களையும் கைப்பற்றிய புழல் போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து புழல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தன்று மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போதும் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீண்டும் ஓர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவம்.. வடமாநிலத் தொழிலாளர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details