தமிழ்நாடு

tamil nadu

ஆதரவற்ற கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றிய தொண்டு நிறுவனம்!

By

Published : Jun 2, 2021, 8:40 AM IST

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் வீதிக்கு தள்ளப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கும் பெயர் சூட்டி தன்னார்வலர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கர்ப்பிணி பெண்
கர்ப்பிணி பெண்

திருநெல்வேலி: குடும்பப் பிரச்சினையால் வீதிக்கு தள்ளபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், அவரது குழந்தைக்கும் பெயர் சூட்டி நெகிழ்ச்சி ஏற்படுத்திய தன்னார்வலர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை சி.என். கிராமம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்ற பெண் தனது கணவர், அவரது குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு துரத்தபட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக தங்குவதற்கு இடம் கிடைக்காமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாத சூழலில் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் பரமேஸ்வரியை முத்துச்செல்வி தொடர்பு கொண்டுள்ளார்.

கர்ப்பிணி என்பதால் முத்துச் செல்விக்கு உடனடியாக உதவிசெய்ய ஆய்வாளர் பரமேஸ்வரி முன்வந்தார். அதன்படி திருநெல்வேலி டவுனில் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் செயல்பட்டுவரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் முத்துச் செல்வியை சேர்த்துவிட்டார்.

பின்னர், தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சரவணன் தலைமையிலான தன்னார்வலர்கள் முத்துச்செல்வியை கவனித்து கொண்டனர். அங்கிருந்த முத்துச்செல்விக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் அவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் முத்துச்செல்வி மீண்டும் காப்பகத்திற்கு வந்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், முத்துச் செல்வியின் குழந்தைக்கு பெயர் சூட்ட தன்னார்வலர் சரவணன் முடிவுசெய்தார். அதன்படி நேற்று (ஜூன்.1) காப்பகத்தில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவில் காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி கலந்துகொண்டு தன்னார்வலர்கள், ஆதரவற்றவர்கள் முன்னிலையில் குழந்தைக்கு தமிழரசன் என்று பெயர் சூட்டினார்.

மேலும் குடும்பத்தினர் ஸ்தானத்திலிருந்து குழந்தைக்கு பிற சடங்குகளையும் ஆய்வாளர் பரமேஸ்வரி செய்தார். இந்தச் சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இது குறித்து முத்துசெல்வி கூறுகையில், “குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் காப்பகத்தில் வந்து சேர்ந்தேன். இங்கு என்னை அனைவரும் கவனித்துக் கொண்டனர். கடைசிவரை எனக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன். நான் 12ஆம் வகுப்பு முடித்துள்ளேன். எனவே ஏதாவது ஒரு வேலை செய்து எனது மகனை காப்பாற்ற வேண்டும். அரசாங்கமும் எனக்கு உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்வதைப் போன்று ஆதரவில்லாமல் கைக் குழந்தையுடன் தவிக்கும் பெண்களுக்கும் அரசு உதவ முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டிற்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details