தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:07 PM IST

ETV Bharat / state

பல்வீர் சிங் வழக்கின் விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பு!

IPS officer Balveer Singh case: அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை கற்களால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இதனையடுத்து, பல் பிடுங்கிய வழக்கு விசாரணை, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி சங்கர் தலைமையிலான போலீசார், நான்கு வெவ்வேறு புகார்களின் அடிப்படையில், நான்கு வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள், அம்பாசமுத்திரம் உட்கோட்ட பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பல்வீர் சிங் உள்ளிட்ட 14 பேரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி திரிவேணி வழக்கு விசாரணையை மேற்கொண்டார். இதனிடையே பல்வீர் சிங் உள்ளிட்ட 14 பேரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு அளித்தனர். இந்த மனுவில், 14 நபர்களையும் தலா இரண்டு நபர்கள் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு டிசம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக ஏ.எஸ்.பி உள்பட 14 பேர் நெல்லை மாவட்ட முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி திரிவேணி விடுமுறை என்பதால், வழக்கு விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details