தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2023, 3:53 PM IST

ETV Bharat / state

நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை வெற்றி - சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் தகவல்!

நாங்குநேரி மாணவனுக்கு மூன்று மணி நேரம் இரண்டு கைகளில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக நடைபெற்று உள்ளதாக சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் பேட்டி
சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் பேட்டி

திருநெல்வேலி: நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தேதி இரவு வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதை தடுக்க சென்ற மாணவனின் தங்கைக்கும் வெட்டு விழுந்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவன் சாதி மோதல் காரணமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவனது தங்கை இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவனுக்கு இரண்டு கைகள், கால்கள், தலை உட்பட சுமார் எட்டு இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதேபோல் மாணவனின் தங்கைக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக நேற்று (ஆகஸ்ட் 13) நெல்லை வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதன் பெயரில் இன்று (ஆகஸ்ட் 14) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவர்கள் மகேஷ் ஸ்ரீதர் அடங்கிய குழுவினர் இன்று நெல்லை வந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை பரிசோதித்த போது இடது கையில் மூன்று இடங்களிலும் வலது கையில் ஒரு இடத்திலும் ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே ஸ்டான்லி மருத்துவ குழுவினர் மாணவனுக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic Surgery) செய்ய முடிவு செய்தனர்.

இதையும் படிங்க:ரூ. 87.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு!

சுமார் மூன்று மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தெரிகிறது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “முதலமைச்சர் ஆலோசனைப்படி ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு பயிற்சி பெற்ற குழுவினர், மாணவன் சின்னத்துரையை பரிசோதித்தனர். பல இடங்களில் காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. எலும்பு முறிவுக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று மாணவனின் இரண்டு கைகளிலும் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்து உரிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தசை நார்கள், ரத்த குழாய்கள், நரம்புகள் உள்ளிட்டவைகளில் ஏற்பட்டு இருந்த காயங்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு, அவற்றை இணைக்கும் பணிகள் நடைபெற்றது.

இடது கையில் 3 இடங்களில் வெட்டு காயங்ள், வலது கையில் ஒரு இடத்தில் வெட்டு காயம் உள்ளது. மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளது. நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவனை கண்காணித்து வருகின்றனர். குறைந்தபட்சம் நான்கு வாரம் மாணவனுக்கு ஓய்வு தேவை. நான்கு வாரம் மாவுக்கட்டில் தான், மாணவன் இருக்க வேண்டும். அதன் பிறகே ஒட்டுறுப்பு சிகிச்சையின் அடுத்த கட்ட நிலை தெரிய வரும். மாணவனின் தங்கை நன்றாக உள்ளார்.

அவருக்கு தசை நார் மட்டும் சேதம் அடைந்து இருந்தது. மாணவனுக்கு உளவியல் கவுன்சிலிங் கொடுத்த பிறகு நன்றாக இருக்கின்றான்.
கிருமி தொற்று வராத பாதுகாப்பான அறையில் இருவரையும் வைத்துள்ளோம். எனவே பார்வையாளர்கள் வருவதை குறைத்து கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”என்று தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:"உண்ட கட்சிக்கே ரெண்டகம்" செய்யும் திருநாவுக்கரசர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details