தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Theni News:விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்!

பெரியகுளம் அருகே போதையில் இருவர் தகராறில் ஈடுபட்ட நிலையில் விசாரிக்க சென்ற போலீசாரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By

Published : Jul 3, 2023, 1:30 PM IST

two drunken persons involved dispute in Periyakulam police went to investigate drunkers threatened to kill the police
விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்

விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்

தேனி:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோயில் அருகே உள்ள தோட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 3) தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் பிரபாகரனின் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளைக் கூறி, 'உன்னை வெட்டாமல் விடமாட்டேன்' என கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்து பார்த்து உள்ளார். அப்போது கத்தியால் ஹேமலதாவின் உடையைக் கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும் ஹேமலதா தெரிவித்து உள்ளார்.

மேலும் ஹேமலதா அவசர எண் 100க்கு அழைத்து, கத்தி மற்றும் அரிவாளுடன் இருவர் வீட்டில் வந்து தகராறு செய்வது குறித்து புகார் தெரிவித்து உள்ளார். உடனடியாக ஹேமலதா அவரது தாயை அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஹேமலதா உடன் தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும், இடுப்பில் இரண்டு டின் பீர்களை வைத்துக் கொண்டு விசாரணைக்கு சென்ற போலீசார்களிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், 'யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெரு பகுதிக்குள் உள்ளே வந்தீர்கள்?' என போலீசார்களிடம் கேட்டதோடு, 'சாதி பெயரைச் சொல்லித் திட்டினாய் என்று உங்கள் மீது வழக்கு தொடுப்பேன்' என மிரட்டி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார்கள் உடனடியாக செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

அப்பொழுது அந்த இருவரும் மது போதையில் போலீசார்களிடம் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை 'ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும்' என அரிவாளை ஓங்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனை அடுத்து அங்கு இருந்த சிலர் அரிவாளை எடுத்து வெட்ட வந்த இளைஞர் காமராஜை தடுத்து நிறுத்தியதோடு போலீசார்களையும் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் வீடியோ எடுத்த காவலரின் முன் நின்று, 'இந்த வீடியோவை டிஎஸ்பி என யாரிடம் வேண்டுமானாலும் போய் காட்டிக்கொள்? எனத் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் வற்புறுத்தியதன் பேரில் போலீசார்கள் அங்கிருந்து திரும்பி காவல்நிலையம் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு போலீசார்களை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்த காமராஜ் என்ற இளைஞர் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய காமராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

போதையில் இருந்த இருவர் விசாரணைக்கு சென்ற போலீசார்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆம்பூர் மணல் கடத்தல் ஆடியோ விவகாரம்.. தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details