தேனி: இரண்டு நாட்கள் சொந்த ஊரில் தங்கியிருந்த துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.
2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டுவருகிறது. இதனால் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்த ஓபிஎஸ், அக்டோபர் 2ஆம் தேதி ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மட்டும், முதலமைச்சருடன் பங்கேற்றுவிட்டு அன்றிரவே சொந்த ஊரான தேனிக்கு வந்தடைந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹார தெருவிலுள்ள அவரது வீட்டில், தனது பேரனின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு அன்றைய தினம் இரவு கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கினார்.
துணை முதலமைச்சரின் வருகையை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பண்ணை வீட்டில் சனிக்கிழமை காலையிலே குவியத் தொடங்கினர். இரண்டு நாட்களாக சென்னை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர், முன்னாள், இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை ஓபிஎஸ் சந்தித்துப் பேசினர்.