தமிழ்நாடு

tamil nadu

நீட் ஆள்மாறாட்டம்: உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

By

Published : Oct 10, 2019, 7:32 PM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷுக்கு 15நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

neet uthithsurya

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் உதித்சூர்யா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணை கமிட்டியில் ஆள்மாறாட்ட மோசடி உறுதியானதையடுத்து மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகினார்.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் வைத்து தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யா அவரது தந்தையான மருத்துவர் வெங்கடேஷ், தாய் கயல்விழி ஆகியோர் தேனி சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டனர். பின்னர் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை மாணவர் உதித் சூர்யா ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் மீது சிபிசிஐடி காவலர்கள் கூட்டுச்சதி, ஆவணங்களை திருத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் தந்தை மகன் இருவரையும் 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறையில் அவர்கள் இருவரும் அடைக்கப்பட்டனர்.

உதித்சூர்யா

நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் இருவருக்கும் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து வரும் 24ஆம் தேதி, மீண்டும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும் என்று உத்தரவளித்தார்.

இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சீனத் தலைவர்களும்... சென்னை பயணங்களும்...!

ABOUT THE AUTHOR

...view details