தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2020, 9:53 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பால் தேனியில் 226 பேர் மருத்துவமனையில் அனுமதி!

தேனி : தேனி மாவட்டத்தில் காவலர், சிறைக் கைதி உள்பட 226 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 25) ஒரே நாளில் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தேனியில் காவலர், சிறைக்கைதி உள்ளிட்ட 226 பேர் பாதிப்பு - 5 பேர் உயிரிழப்பு!
தேனியில் காவலர், சிறைக்கைதி உள்ளிட்ட 226 பேர் பாதிப்பு - 5 பேர் உயிரிழப்பு!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது.

தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக நீதிமன்றம், காவல் ஆணையர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் உள்ள கைதி என இன்று ஒரே நாளில் 226 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் அதிகபட்சமாக பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 226 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்கு உள்ளானவர்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் சின்னமனூரைச் சேர்ந்த 75வயது முதியவர், போடியைச் சேர்ந்த 62வயது மூதாட்டி, தர்மாபுரியைச் சேர்ந்த 61வயது முதியவர், காட்ரோடு பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் மற்றும் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 60்வயது முதியவர் என இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி நகராட்சிப் பகுதிகளைக் கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இதுவரை 11 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 746 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 982 பேர் சிகிக்கைப் பெற்று வருகின்றனர். 205 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

பெருகி வரும் கரோனா நோய்த்தொற்றால் தேனி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details