தமிழ்நாடு

tamil nadu

1,000 ஆண்டுகள் பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

By

Published : Feb 19, 2023, 2:56 PM IST

தேனி பெரியகுளம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் திருவிழா, மகா சிவராத்திரியையொட்டி நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்தனர்.

year
year

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று இரவு தொடங்கி ஐந்து நாட்களுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கு, கடந்த 28ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று(பிப்.18) இரவு மாசி மகா சிவராத்திரியில் திருவிழா தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்று கோவிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மன் ஓலை பெட்டியில் குழந்தையாக மிதந்து, பிறகு மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், செங்கரும்பு கட்டுகளை காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதேபோல் கோபுரமே இல்லாத கோவிலில் அடைத்த கதவுக்கே பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 22ஆம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தை சீர் செய்வதற்காக பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு காவல் ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதற்காக பெரியகுளம், வத்தலகுண்டு பகுதியில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Maha shivratri: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details