நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய அணையாக ’ரேலியா அணை’ இருந்துவருகிறது.
43.5 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையிலிருந்து, குன்னூர் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சிக் காலங்களில் தண்ணீர் அளவு 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் நீரை கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.
நகராட்சி சார்பில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், மக்கள் குடிநீரை விலைகொடுத்து வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.