நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள பெரும்பாலான நீரோடைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக கட்டடங்கள், வீடுகளாக கட்டப்பட்டுள்ளன. பல வருடங்களாக அதனை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை கூடலூர் வருவாய்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி கூடலூர் நகரில் ஓடும் முக்கிய நீரோடையை ஆக்கிரமித்து வீடுகள், வணிக நிறுவனங்களை கட்டியுள்ள 17 பேருக்கு முதற்கட்டமாக கூடலூர் வருவாய் ஆய்வாளர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நீரோடையை ஆக்கிரமித்து கட்டடம்: 17 பேருக்கு நோட்டீஸ்! ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட நீரோடையை 500க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ள நிலையில், வெறும் 17 பேருக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் பெற்றவர்கள் தரப்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
கோக்கால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த நீரோடை தொடக்கம் முதலே ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால் அங்கெல்லாம் நோட்டீஸ் வழங்காத வருவாய்துறையினர், குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர். நீர் நிலைகளை காப்பாற்ற நீர் உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மாறாக வருவாய் துறையினர் இடைபட்ட இடத்தில் மட்டும் நோட்டீஸ் வழங்கியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளனர்.