சீனாவில் உள்ள வூஹான் பகுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் கேரளாவில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தாக்கியுள்ளதையடுத்து அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைவரையும் மாநில எல்லையில் உள்ள பாட்டவயல், நாடுகாணி, எருமாடு, சேரம்பாடி, கெத்தை உள்ளிட்ட ஐந்து சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருவதாக நீலகிரி மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களில் காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனடியாகத் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்த தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.