தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளி உயிரிழப்பு :உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர்: அத்தியூரில் சோளக்காட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த தொழிலாளி குமார் மரணத்திற்கு நீதி வேண்டி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jun 30, 2020, 9:59 AM IST

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகத்திற்குட்பட்ட அத்தியூர் கீழத்தெருவை சேர்ந்த குமார் (40) அங்குள்ள இமயவர்மன் என்பவரது செங்கல் சூளையில் கல் அறுக்கும் பணி செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு செங்கல் சூளைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைக்களில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது சைக்கிள் மட்டும் செங்கல் சூளை அருகே நின்றுள்ளது குமார் காணாமல் போனது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஜெயந்தி புகார் அளித்தார்.

இதற்கிடையில் இரு நாட்களுக்கு பிறகு செங்கல் சூளை அருகேயுள்ள சோளக்காட்டில், உடலில் பல இடங்களில் இரத்த காயங்களுடன் குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகம் கொண்டனர்.

இதையடுத்து, திருப்பனந்தாள் காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா, செங்கல் சூளை உரிமையாளர் இமயவர்மனின் தூரத்து உறவினர் என்பதால் காவல்துறையினர் இதனை தற்கொலை வழக்காக மாற்றிட முயற்சி செய்வதாக கூறி, இச்சம்பவத்திற்குரிய நீதி வேண்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு குமார் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது,

திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இவ்வழக்கில் உரிய நியாயம் கிடைக்க, வேறு ஒரு காவல் ஆய்வாளரை கொண்டு விசாரிக்கவும், உயிரிழந்த குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் இழப்பீடு கிடைக்கவும், உடற்கூறு ஆய்வினை தனி ஒரு மருத்துவர் அல்லாமல், மருத்துவர் குழு மேற்கொள்ளவும், உடற்கூறு ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்திட வேண்டும் என்றும் கோட்டாட்சியரிடம் அவரது மனைவி ஜெயந்தி கோரிக்கை மனு அளித்தார்.

இதனை தொடரந்து நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி வழக்கு விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவக்குழு உடற்கூறு ஆய்வு செய்திடவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திடவும் உத்தரவிடப்பட்டது.

இதனையடித்து மறியலில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். உயிரிழந்த குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், ஜெயகுமாரி (11) என்ற மகளும், ஜெயசீலன் (10) என்ற மகனும் உள்ளனர்.

இதையும் படிங்க: கஜகஸ்தானிலிருந்து தருமபுரி திரும்பியவருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details