தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2023, 3:16 PM IST

ETV Bharat / state

எம்ஜிஆர் இடைத்தேர்தலில் வென்றது போல; ஈரோட்டிலும் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது திண்டுக்கல்லில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது போல, வரும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக ஈபிஎஸ் தலைமையில் வெற்றி பெறும் என முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தெரிவித்தார்.

ஈரோட்டில் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்
ஈரோட்டில் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்

எம்ஜிஆர் இடைத்தேர்தலில் வென்றது போல; ஈரோட்டிலும் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்

தஞ்சாவூர்: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி என்றும் முன்னாள் மேயர் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி ஒற்றைத் தலைமையினை வலியுறுத்தும் வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை ஓபிஎஸ் தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு பெற்றது செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் கூறும்போது, "உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது ஆறு மாத காலத்திற்குள் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் நடைபெற்று அதில் அதிமுக வெற்றி பெற்றது. அதைப்போல் ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, கேசவன், காந்திமதி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details