தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 13, 2023, 10:55 AM IST

ETV Bharat / state

Tenkasi: தென்காசி தொகுதியில் தபால் ஓட்டுகளின் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தபால் ஓட்டுகளின் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Counting of postal ballots has started at Tenkasi Revenue Commissioner office
தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் ஓட்டு மறுவாக்கு எண்ணிக்கை துவங்கியது

தென்காசி: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிட்டார். இந்த நிலையில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், “பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஜூலை 5 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தபால் வாக்குகள் பதிவு செய்தது, எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆகியவை ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், தபால் வாக்குகளை 10 நாட்களில் மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல், வழக்கின் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று (ஜூலை 13) காலை 10 மணிக்கு தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் காலை 10 மணிக்கு தபால் வாக்கு மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது வேட்பாளர்களோ அல்லது அவர்கள் சார்ந்த ஒரு பிரதிநிதியோ அந்த இடத்தில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவர்களுக்கு நேற்று (ஜூலை 12)அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடாரும், அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய செல்வமோகன்தாஸ் தரப்பில் மேலகரம் அதிமுக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களைத் தவிர்த்து, அவர்கள் சார்பில் முகவர்கள் என்பதன் அடிப்படையில், திமுக, அதிமுக கட்சிகள் தரப்பில் இருந்து, தலா 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: விழா மேடையில் காலணியை கழட்டி வைத்து வந்த விவசாயியை கண்டித்த எம்எல்ஏ... பொதுமக்கள் பாராட்டு!!

ABOUT THE AUTHOR

...view details