தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2023, 1:29 PM IST

ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி விவசாயி பலி - மின் வேலியில் சிக்கியவரை காப்பற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

தென்காசி அருகே வயல்வெளியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய விவசாயியை காப்பாற்ற சென்ற பக்கத்து வயலை சேர்ந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மின் வேலியில் சிக்கிய விவசாயி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

near Tenkasi farmer died trying to save a neighbor farmer trapped in an electric fence
மின்வேலியில் சிக்கிய விவசாயியை காப்பாற்ற சென்ற பக்கத்து வயலை சேர்ந்த விவசாயி பலி

தென்காசி:ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் (47). இவர் நெல், கத்தரிக்காய் போன்ற பயிர்களை தனது வயலில் பயிரிட்டிருந்தார். பயிர்களை காட்டு பன்றி, மான்கள் நாசம் செய்வதை தடுக்க அவரது வயலுக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

தினமும் மின் வேலிக்கு இரவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம். அதன்படி இன்று காலையில் மின் இணைப்பை துண்டிப்பதற்காக சென்ற விவசாயி கனகராஜ் தடுமாறி விழுந்ததில் மின்வேலியில் சிக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி முத்துராஜ் (வயது 37) அவரைக் காப்பாற்றும் நோக்கில் வேகமாக வந்த போது அவரும் மின்வேலியில் சிக்கினார்.

இதில் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலங்குளம் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் வேலியில் சிக்கிய விவசாயியை காபாற்ற சென்ற மற்றொரு விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின் வேலிகளால் சிக்கி வன விலங்குகள் அதிகளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. மார்ச் மாதம் 6ஆம் இரவு தருமபுரியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியால் சிக்கி மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்தது.

மேலும் பல இடங்களில் காட்டுப் பன்றிகள், மான்கள் என பல காட்டு விலங்குகளும் உயிரிழந்துள்ளன. மேலும் மனிதர்களும் மின் வேலியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்த போதிலும் சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைக்கப்படுவது குறைந்தபாடில்லை. இவ்வாறு விதிகளை மீறி அமைக்கப்படும் மின்வேலிகளால் வன விலங்குகள் பாதிக்கப்பட்ட பின்னர் தான் மின்வேலிகள் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியால் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, இதுபோல் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைத்திருப்பது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து இருப்பபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளியில் அசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - பெற்றோர் கைது!

ABOUT THE AUTHOR

...view details