தமிழ்நாடு

tamil nadu

குறைவான நேரம் அதிக பணம்..! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை!

By

Published : Aug 6, 2023, 8:26 PM IST

இளம் வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்களிடம் இருந்து அறிவு, அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குறைவான நேரத்தை செலவிட்டு அதிக பணம் ஈட்ட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா ஆலோசனை வழங்கியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சேலம்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 06) நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "சேலம் நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளது. புதிய நீதிமன்ற கட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு கட்டப்பட உள்ளது. காகிதம் இல்லா நீதிமன்ற நடைமுறைகள் என்ற நிலையை அடைய வெகுதூரம் இல்லை என்று சொல்லலாம்.

அந்த வகையில், புதிய நீதிமன்ற கட்டடங்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைய வேண்டும். நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண மாற்று வழிகள் குறித்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சிந்திக்க வேண்டும்.

அனைவருக்கும் பொறுமை மிக முக்கியமாகும். இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களிடம் இருந்து அறிவு மற்றும் அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதிக நேரம் செலவிட்டு குறைந்த பணம் ஈட்டுவதை விட, குறைவான நேரத்தை செலவிட்டு அதிகம் பணம் ஈட்டும் நுட்பத்தை இளம் வழக்கறிஞர்கள் பெற முடியும்.

கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் பணிச்சுமை இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்" என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பல்வேறு அறிவுறைகளை வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி, மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சுமதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெ.கிறிஸ்டல் பபிதா, சேலம் ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையர் பி.விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் மற்றும் சேலம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.முத்துசாமி, செயலாளர் ஜி.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஜி அஸ்ரா கார்க்கின் அடுத்த குறி வடசென்னை - அள்ளுவிடும் ரவுடிகள்.. பாய்ச்சலுக்கு ரெடியான பஞ்சாப் ரியல் சிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details