தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2020, 5:15 PM IST

ETV Bharat / state

சேலத்தில் ஹோட்டல் உரிமையாளர், ஊழியர்களுக்கு கரோனா: அச்சத்தில் மக்கள்

சேலம் : தனியார் உணவக உரிமையாளர், ஊழியர்கள் உள்பட ஒரே நாளில் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் உச்சம் பெற்றுவருகிறது.

அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

இதுவரை சேலத்தில் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரபல தனியார் உணவக உரிமையாளருக்கும், உணவக ஊழியர்கள் மூன்று பேருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உணவகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களும், உணவகங்களுக்கு பார்சல் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று பரவியதை அடுத்து, உணவகம் மூடப்பட்டுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவ்வழியே பொதுமக்கள் செல்லாத வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு சண்டிகர் மாநிலத்திலிருந்து சேலம் வந்த அந்த நபர் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் தவிர, சென்னையிலிருந்து சேலம் வந்த 14 பேர், பெரம்பலூரிலிருந்து சேலத்திற்கு வந்த எட்டு பேர் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சேலத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனை சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவி வருவதால், ,மாவட்டத்தில் உள்ள எல்லைகள் கடுமையான கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :சேலத்தில் செல்போன் கடைகளில் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details