வடகிழக்குப் பருவமழை மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரத்தில் மீன் பிடிக்க தடை!
ராமநாதபுரம்: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.
முன்னதாக, அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும், அதேபோல் கடல் பகுதியில் காற்றின் வேகம் மற்றும் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லயிருந்த மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத் துறை அனுமதி சீட்டு வழங்கவில்லை. மேலும், அனுமதி வழங்காத நிலையில் மீறி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் எச்சரித்தனர். இதனால், ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.