ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, உந்திபூத்த பெருமாள் கோயில் திருப்பணியின்போது கருடாழ்வார் சன்னதியின் உள்பகுதிச் சுவரில் இருந்த கல்வெட்டு அதன் வெளிப்பகுதியில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு படித்து ஆய்வு செய்தபோது, அது கி.பி.1329ஆம் ஆண்டைச் சேர்ந்த 692 ஆண்டுகள் பழமையான பராக்கிரமபாண்டியன் காலக் கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தார்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது:
மொத்தம் 35 வரிகள் கொண்ட கல்வெட்டின் முதல் வரியும் கடைசி பகுதியும் அழிந்துவிட்டன. கல்வெட்டின் ஓரங்களில் சிமெண்ட் பூச்சு காரணமாக எழுத்துகள் சேதமடைந்துள்ளன. கி.பி.1315 முதல் கி.பி.1334 வரை ஆண்ட திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீபராக்கிரமபாண்டியனின் 15ஆம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1329 ஆகும். இவருக்கு வாளால் வழி திறந்தான் என்னும் பட்டப்பெயரும் உண்டு.
இக்கோயில் இறைவனுக்கு திருப்படி மாற்றுக்காக, மலைமண்டலத்தைச் சேர்ந்த திருவரங்கராயன் என்பவர் வழங்கிய பணத்தைக் கொண்டு அரும்பொற்கூற்றத்தைச் சேர்ந்த சாத்தி ஏரி என்ற ஊரில் நிலம் வாங்கி அதை இறையிலி தேவதானமாக இக்கோயிலுக்குக் கொடுத்துள்ளனர்.
திருவாடானை அருகிலுள்ள புல்லுகுடி சிவன்கோயிலில் உள்ள கி.பி.1201ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டிலும் சாத்தி ஏரி என்ற ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சாத்தி ஏரி என்னும் பெயரில் இப்பகுதியில் ஊர் எதுவும் இல்லை. அது அழிந்துபோயிருக்கலாம். கல்வெட்டில் கடம்பாகுடி என்ற ஊரும் சொல்லப்படுவதால் அவ்வூருக்கு அருகில் சாத்தி ஏரி இருந்திருக்கலாம்.
தானமாக வழங்கிய நிலத்தின் எல்லைகள் சொல்லும்போது, செட்டி வயக்கல், கண்ணன் வயக்கல், வடகூற்று நிலம், கிழக்கு நிலம் ஆகிய நிலத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலத்தை வயக்கல் என்பர். மேலும் மாகாணி, முக்காணி, அரைக்காணி, அரை மா, முதிரிகை ஆகிய நில அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன. கல்வெட்டில் சொல்லப்படும் விழுப்பராயன் என்பவர் நிலம் விற்றுக் கொடுத்தவராக இருக்கலாம்.