புதுக்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள பவளத்தாள் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை (98). 1922 செப்டம்பர் 24 ஆம் தேதி பிறந்த இவர் இளமைப் பருவத்திலேயே சிங்கப்பூர் சென்று உள்ளார்.
அப்போது சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருந்த காலகட்டம். அற வழியே சிறந்தது என்று மகாத்மா காந்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் போராட்டம் வெற்றி அடையவில்லை. இதைடுத்து ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கம் செய்ததோடு மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.
அந்த ராணுவ படையில் இந்தியா முழுவதிலிருந்தும், பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் சேர்ந்தனர். அப்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்த அண்ணாமலையும் இந்திய தேசிய ராணுவப் படையில் இணைந்து கொண்டார்.
1940 முதல் 1942 வரை இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தார். அரசியல் குறித்த வகுப்புகள் நடந்தபோது ஒரே ஒருமுறை மட்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்திருக்கிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947களிலும் சுதந்திர வெற்றியை சிங்கப்பூரில் இருந்துதான் கொண்டாடி இருக்கிறார் அண்ணாமலை.