தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2023, 2:57 PM IST

ETV Bharat / state

"இது தான் திமுகவின் சாதனையா?" - மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு!

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதில் வெளிப்படைத் தன்மையோடும், நேர்மையாகவும் முறையான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Ex minister Vijayabaskar
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக மீது மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை:அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரியும், விலைவாசி உயர்வு காரணமாக திமுக ஆட்சியைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "தவறு செய்த அமைச்சரை அமைச்சரவையிலிருந்து நீக்காமல் அவருக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை திமுக செய்து வருகிறது. மக்கள் மத்தியில் திமுகவிற்கு மிகப்பெரிய கெட்டப்பெயர் வந்துவிட்டது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் திமுகவினரே இந்த ஆட்சி எப்போது போகும் என்று கூறும் அளவிற்கு மக்கள் மத்தியில் வெறுப்பு உருவாகி, திமுக ஆட்சி மீது வந்துவிட்டது.

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வைத்தாலும் அல்லது எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வைத்தாலும் கண்டிப்பாக அதிமுக ஆட்சிக்கு வரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே இரட்டை இலை பட்டன் உடையும் அளவிற்கு பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகாவது திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறு செய்தவர்களுக்கு துணை நிற்கின்ற போக்கை கைவிட வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்கினாலோ அல்லது அவர் ராஜினாமா செய்தாலோ தான் இந்த பிரச்னை முடிவுக்கு வரும். அதன் பிறகு மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசுப் பணிகள் முடங்கியுள்ளன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15 மாத காலத்தில் மிகப்பெரிய மருத்துவமனை நாங்கள் கட்டியிருக்கிறோம். இது எங்களது மிகப்பெரிய சாதனை என்று கூறுகிறார். ஆனால் அந்த மருத்துவமனைக்கு என்று ஒரு மருத்துவர் கூட இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. ஓமாந்தூரார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது சாதனையா? ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாதத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டி திறப்பு விழாவும் நாங்கள் கண்டோம்.

அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே 63 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் தமிழ்நாட்டில் 2-வது பல் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் காலம் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இந்தாண்டு 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளனர், இருப்பினும் பணிகள் இன்னமும் முடியவில்லை. கள நிலவரத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தவறு அல்ல, ஆனால் அது தொடர்பான வெளிப்படையான தகவல் இல்லை. வெளிப்படையான தகவல்களை அரசு வெளியிட வேண்டும். அதுவும் அது அரசின் நேர்மையான தகவலாக இருக்க வேண்டும். இதற்கு யாரும் துணை போகக்கூடாது, விமர்சனத்திற்கு உள்ளாக்கக் கூடாது. வர்ணிக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது.

தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசு நடந்துள்ள விதம் பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. மேலும் அது விவாதப் பொருளாக மாறி உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படைத்தன்மையோடு அறிக்கை வெளியிட வேண்டும்.

தாய் சேய் இறப்பு விகிதம் அதிமுக ஆட்சிக் காலத்தில் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் கூடுதலாகி விட்டது. இதுதான் சாதனையா? இலக்குகளை அடைய முடியாமல் சுகாதாரத்துறை தத்தளித்தது. பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் சிடிஎஸ் ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வழங்கப்படுகிறது.

குறிப்பாக காப்பீடு விஷயத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. காப்பீடு பெறுவதற்கு தான் முதலில் முயற்சி செய்கிறார்களே தவிர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் முன்வரவில்லை. முதலில் நோயாளிகளை பிழைக்க வைக்க வேண்டும். அதன் பிறகு தான் காப்பீடு குறித்து யோசிக்க வேண்டும்.

அதை விடுத்து தற்போது முதலில் காப்பீடு விவகாரம் தொடர்பாக முடிவு எடுத்துவிட்டு அதன் பிறகு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டை எதிர்பார்க்காமல் முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு காப்பீடு பெறுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பக்தி பாடலுக்கு நடுரோட்டில் பரதநாட்டியம்: மதுப்பிரியரின் Viral வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details