புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகேயுள்ள மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அறங்குளவன்(60). இவர் வன்னியம்பட்டியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜம்மாள்(55). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.
ரமேஷ் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வன்னியம்பட்டி சேர்ந்த பிரதீபாவுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் தீயில் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரதிபாவின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும் பிரதீபா கூறியதாக காவலர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வல்லத்திராக்கோட்டை காவல்துறை இன்ஸ்பெக்டர் அழகம்பாள் வழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கைது செய்தார்.
மாமியாரை மருமகள் எரித்து கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:லாரி தரகர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!