புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஒன்றியம், தெம்மாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர், கருப்பையா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இறந்து விட்டார். இந்நிலையில் அந்தத் தலைவர் பொறுப்புக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரெங்கநாயகி என்பவர் பொறுப்பு ஏற்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுப்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இரண்டாவது வார்டு உறுப்பினர், நான்காவது வார்டு உறுப்பினர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் தங்கப்பொண்ணு (ஊராட்சி மன்ற செயலர் திருநாவுக்கரசின் அண்ணன் மனைவி) மற்றும் ஊராட்சி மன்ற செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ரெங்கநாயகியை பொறுப்பேற்க விடாமல் ஒரு தலைபட்சமாக நடந்து வருவதாகவும், இதனால் ஊராட்சியை செயல்படாமல் தடுப்பதாகவும் மற்ற (துணைத் தலைவர் ரெங்கநாயகி உள்பட) 6 வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தலைவரை தேர்ந்தெடுக்க பெரும்பான்மை அதிகமாக இருந்தும் தங்களை பொறுப்பேற்க விடாமல், இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக மூன்று முறை கூட்ட அறிவிப்பு கொடுத்தும் இந்த தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கும் இரண்டாவது கையொப்ப நபர் தேர்ந்தெடுப்பதற்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.