தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அப்போ வேலையில்லா பட்டதாரி...இப்போ ஹியூமன் ஆர்ட் சிற்பி வாசு!

பெரம்பலூர்: தனது விடாமுயற்சியால் மரங்களில் மனித சிற்பங்களை உருவாக்கி, அடுத்த தலைமுறைக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார், பட்டதாரி இளைஞர் வாசு கொண்டுசெல்கிறார்.

By

Published : Sep 8, 2019, 11:53 PM IST

engineer vasu

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை. இந்த சிற்பக் கலை மனித நாகரிகத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றோடு எடுத்துரைத்துள்ளது. தமிழனின் அறிவுக்கூர்மையை வியக்க வைத்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழர்கள் சிற்பக்கலையில் சிகரம் தொட்டுள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது. பல்லவர், சோழர், மற்றும் பாண்டிய மன்னர்கள் கால சிற்பங்கள் இன்றளவும் முன்னோடியாகத் திகழ்கிறது.

கடவுள் சிலைகள்

சிற்பக்கலை என்பது நமது அறிவுக்கூர்மையை சோதித்து பார்க்கும் கலைகளில் ஒன்று. சிற்பங்கள் வடிவமைப்பதில் பல வகைகளை சொல்லலாம். ஆனால் மரச்சிற்பங்கள் என்றென்றும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மரச்சிற்பம் வீடு மற்றும் அரங்குகளையும் அழகுப்படுத்துகிறது. பல்வேறு வடிவங்களைக் கொண்ட மரச்சிற்ப சிலைகள் கலைப்பிரியர்களை அலாதி இன்பம் காணச்செய்பவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஆகிய ஊர்களில் அதிகமாக மரச்சிற்பங்கள் உருவாக்கப்படும் இடமாக இருக்கிறது.

மனிதனை சிற்பியாக்கும் வாசு

வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருப்பது தம்மம்பட்டிதான். இங்கு வடிவமைக்கப்படும் மரச்சிற்பங்கள் மிக தத்ரூபமாக நேர்த்தியாகவும் இருக்கிறது. இதேபோன்று அரும்பாவூர் மரச்சிற்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தம்மம்பட்டி, கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் ஆகிய ஊர்களில் வடிவமைக்கப்படும் மரச்சிற்பங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட தனிச்சிறப்பை பெற்றுள்ள மரச்சிற்பங்கள் வருங்கால இளைஞர்களிடத்திலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஹியூமன் ஆர்ட் வாசு சிறப்பு சந்திப்பு

தமிழ்நாடு அரசே சிற்பக்கலையை கற்றுத்தர முன்வந்தாலும் கற்கும் ஆர்வம் இளைஞர்களிடத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அரும்பாவூர் கிராமத்தில் முன்பொரு காலத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிற்பக்கலை தொழிலை செய்து வந்துள்ளனர். காலப்போக்கில் இந்த சிற்பக் கலையை ஐந்து குடும்பம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். இவர்கள் இந்த சிற்பக் கலையை அழியாமல் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வாசு. இவர், 2010 -2014ஆம் ஆண்டு வரை விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். மரச்சிற்பம் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், தான் படிக்கும் காலத்திலேயே தன் சகோதரர்களிடம் சிற்பக் கலையை கற்றுக்கொண்டார். பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்கு செல்வதைத் தவிர்த்து முழுவதுமாக தன்னை சிற்பக்கலையில் ஈடுபடுத்திக்கொண்டார். அரும்பாவூரில் பெரும்பாலும் சாமி சிலைகளுக்குதான் மவுசு அதிகம்.

இதில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பிய வாசு புதுமையான முயற்சியுடன் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார். மனித உருவங்களை நேர்த்தியாக செதுக்குவதில் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். செதுக்க செதுக்கத்தான் ஒரு கலைஞன் சிற்பியாவான். அதேபோன்று வாசுவின் விடாமுயற்சியால், ஒரு மரம் மனித சிற்பமாக உயிர் பெற்றுள்ளது. இதனை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் வாசுவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் தொழில் பக்தியைத் தாண்டி, இதனை வியாபாரம் செய்யும் யுக்தியையும் வகுத்துக்கொண்டுள்ளார். சமூகவலைதளங்களில் தான் செய்யும் சிற்பங்களை வீடியோவாக பதிவிட்டு பல நெட்டிசன்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

தற்போது அவர் இன்ஜினியரிங் பட்டதாரி வாசு அல்ல, பல மனிதர்களுக்கும் உயிர்கொடுக்கும் கலைச் சிற்பி ஆகிவிட்டார். தனக்கென தனி பாணியை பின்பற்றி வரும் வாசு மனித உருவங்களை உருவாக்குவதற்கு தேக்குமர மரத்தைப் பயன்படுத்தி வருவதாக அவரே தெரிவித்துள்ளார். மற்ற சிற்பங்களுக்கு தூங்கும் வாகை என்னும் மரத்தை பயன்படுத்துகிறார். மனித உருவச்சிற்பங்கள் ஒரு அடி ரூபாய் 4,500 முதல் அடிக்கு தகுந்தார்போல் ரூபாய் 15,000 வரை விலைக்கு போகிறது என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

வாசு வேலையில்லா பட்டதாரி அல்ல.... பலருக்கும் ஏணிப்படிகளாய் உழைத்துக்கொண்டிருக்கும் மகாகலைஞன். இவர் பல வெற்றிகளைப் பெற ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

ABOUT THE AUTHOR

...view details