தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 19, 2020, 12:05 AM IST

ETV Bharat / state

12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?

கரோனா நெருக்கடியில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை ஒலி பரப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளது, தமிழ்நாடு அரசு. ஆனால் 12 ஆண்டுகளாக விளக்கு வெளிச்சத்தில்தான் தெற்கு சீத்தப்பட்டி குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். இவர்களுக்கு என்ன மாற்று வைத்திருக்கிறது அரசு? கூலி தொழிலாளர்களின் வீட்டில் மின்விளக்குகள் ஒளிர இனிமேலாவது அரசு உதவுமா? காத்திருக்கிறார்கள் சீத்தப்பட்டிவாசிகள்...

சீத்தப்பட்டிவாசிகள்
சீத்தப்பட்டிவாசிகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இன்னமும்கூட அரிக்கேன் விளக்கு ஒளியில் குழந்தைகள் பயின்றுவருகின்றனர். ஓலைகளால் வேயப்பட்ட கூரை வீடுகள்தான் அங்கு பிரதானம். தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் கடந்த 12 வருடங்களாக இந்தப் பகுதியினர் சிரமப்பட்டுவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிப்பாளையம் ஊராட்சியிலுள்ள தெற்கு சீத்தப்பட்டி பகுதிதான் அது.

நாமக்கல் மாவட்டம் ராசிப்பாளையம் அருகே உப்பாத்துபாலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவந்தனர். இந்த பகுதி நீர்வழிப்பாதை புறம்போக்கு என்பதால் இங்கு வசித்தவர்கள், தெற்கு சீத்தப்பட்டி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இங்கு அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல வீடு கட்டி சுமாராக 12 ஆண்டுகள் நாள்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும்கூட இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. நவீன யுகமான இன்றைய காலகட்டத்தில், இன்னமும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு பொழுதைக் கழித்துவருகின்றனர், இப்பகுதியினர்.

12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?

’தெருவிளக்குக்கூட இல்லாத இந்த மயானத்தில், இரவில் எங்களை விஷ ஜந்துக்கள் தாக்கினால் என்ன செய்வோம்’ என அடிப்படை வசதிகளுக்காக ஆவேசப்படுகிறார், கவிதா. அவர் கூறுகையில், “2008ஆம் ஆண்டு இவ்விடத்திற்கு வரும்போது அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்துதருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இப்போதும் என் பையன் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படிக்கிறான். இதனால் அவனுடைய கண்ணில் பார்வைத்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக இருக்கிறது. வயதானவர்கள் இந்த கும்மிருட்டுக்குள் நடமாட முடியுமா? வாக்காளர் அட்டைகளைக் கொடுக்கும் அரசாங்கத்தால் பட்டா கொடுக்க முடியவில்லை. நாங்களும் மனு கொடுக்காத அலுவலர்கள் கிடையாது” என 12 வருடங்களாக தனது மனதை அரித்துக் கொண்டிருக்கும் ரணங்களை வெளிப்படுத்துகிறார், கவிதா.

வருவாய் துறையினர் பட்டா வழங்கவில்லை, அதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது கடினமாகிவிட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர்வரை பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

”நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு, வீட்டு வரி ரசீது இருந்தாலும் இந்த இடத்திற்கான பட்டா இல்லாததால் மின்சார துறையினர் மின் இணைப்பு வழங்க மறுக்கின்றனர். எத்தனையோ முறை அலைந்து திரிந்துவிட்டோம். ஆனால் முறையான பதில்கள் கிடைக்கவில்லை” என்கிறார் மகேஸ்வரி.

இது குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார், “ சீத்தப்பட்டி பகுதி மக்களின் பட்டா பிரச்னை தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தி, அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கரோனா நெருக்கடியில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை ஒலி பரப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளது, தமிழ்நாடு அரசு. ஆனால் 12 ஆண்டுகளாக விளக்கு வெளிச்சத்தில்தான் தெற்கு சீத்தப்பட்டி குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். இவர்களுக்கு என்ன மாற்று வைத்திருக்கிறது அரசு? கூலி தொழிலாளர்களின் வீட்டில் மின்விளக்குகள் ஒளிர இனிமேலாவது அரசு உதவுமா? காத்திருக்கிறார்கள் சீத்தப்பட்டிவாசிகள்.

இதையும் படிங்க: 11 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் 3 பிள்ளைகளுடன் இருளில் வாழும் குடும்பம்

ABOUT THE AUTHOR

...view details