நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை சேகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். அப்போது சிவியம்பாளையம், கோனூர், ராசம்பாளையம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள பயனாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் இ-வாகனம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வாகனங்களை எடுத்துச்செல்லும் நிகழ்ச்சியை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர். அப்போது அங்கிருந்து இ-வாகனத்தை எடுத்து புறப்பட்ட பெண் ஒருவர் தட்டுத்தடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அதனைத்தொடர்ந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதினார்.
தொடர்ந்து ஒரு வழியாக வண்டியை நிறுத்திய அவர், 'நான் தான் சொன்னேனே.. எனக்கு ஓட்டத் தெரியாது' என்ற தொனியில் இறங்கி அமைதியாக வந்துள்ளார். சற்று நேரத்தில் கலவர பூமியாக காட்சியளித்த இடத்தில் சுற்றி உள்ளவர்கள், ’என்னடா நடக்குது இங்கனு’ யோசிப்பதற்கு முன்பு இந்த விபரீத விளையாட்டு முடிந்து விட்டது. அந்த பெண் வாகனத்தை எடுத்து ஓட்டிச்செல்லும்போது, பின்னால் ஒருவர் பாதுகாப்பிற்காக ஓடிய நிலையிலும் அவரால் இந்த விபத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரைத் தொடர்ந்து மற்றொரு பெண் மின்சார வாகனத்தை எடுத்துக்கொண்டு நடு ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக மாஸ் drive செய்துள்ளார்.
இதையும் படிங்க:டோல் பிளாசா ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி