தமிழ்நாடு

tamil nadu

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஒப்பந்தம்; நன்மைகள் என்ன..?

By

Published : Jul 22, 2023, 6:35 AM IST

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முதலாக பிரதமர் மோடியை சந்திக்க ரணில் விக்ரமசிங்கே நேற்று (ஜூலை 21) இந்தியா வந்தார். இலங்கை அதிபருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இதனையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில், இந்தியா - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான ஒப்பந்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே வாரத்திற்கு ஒரு முறை எம்எஸ் எம்ப்ரெஸ் என்ற சொகுசுக் கப்பல் சென்னையில் இருந்து இலங்கையின் அம்பாந்தோட்டை, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 துறைமுகங்கள் வழியே இயக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த ஏப்ரல் மாதம் படகுப் போக்குவரத்து தொடங்குவதாக இருந்த நிலையில், அது தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறை வரை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இலங்கையில் யுபிஐ, நாகையிலிருந்து பயணிகள் கப்பல் - மோடி, ரணில் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்...

கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு அத்தியாவாசிய பொருட்களில் இருந்து அனைத்து பொருட்களும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்சே தலைமறைவாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். இதனையடுத்து அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக ரணில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இலங்கையில் அதிகளவில் வருவாய் ஈட்டக்கூடிய துறையாக சுற்றுலா துறை திகழ்கிறது. இதனை மேம்படுத்தும் விதமாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலை இயக்க இந்தியா பிரதமர் மோடிக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்ற பிரதமர் மோடி ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து ஒப்பந்ததில் கையெழுத்திட்டார். இதனால், இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து எளிமையாக சென்று வர முடியும் என சொல்லப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் இருந்து காய்கறி, கனிம பொருட்கள் உட்பட பல பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்ல எளிமையாக இருக்கும் எனவும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடி - இலங்கை இடையேயும் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஆங்கில டீச்சர் இல்லாத அரசுப் பள்ளி.. பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details