தமிழ்நாடு

tamil nadu

"சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை" - சசிகலா!

By

Published : Mar 24, 2023, 6:07 PM IST

Updated : Mar 24, 2023, 6:49 PM IST

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், அதிமுகவை ஒருங்கிணைத்து அதற்கு தலைமையேற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

AIADMK
ஓபிஎஸ்

சசிகலா பேட்டி

மயிலாடுதுறை: சசிகலாவின் உறவினர் சிவக்குமார் இல்ல நிச்சயதார்த்த விழா திருவாரூரில் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர், இன்று(மார்ச்.24) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புதன் தலமான திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு கோவிலில் சுவாமி, அம்பாள், புதன், அகோரமூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சட்டசபையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது என்றும், மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து தாங்கள் தலைமை ஏற்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு நிச்சயமாக தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்ஜிஆர் போட்ட விதை - அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா - அவர்கள் வழி வந்த தாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து மூன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோரமுர்த்தியாக தனி சன்னதி கொண்டு விளங்குகிறார்.

சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை ராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி ராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார். நவகிரக கோவில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 10ஆம் தேதி திருக்கல்யாணம், 12ஆம் தேதி திருத்தேரோட்டம் மற்றும் 15ஆம் தேதி தெப்ப உற்சவம், 16ஆம் தேதி அன்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இந்திரப் பெருவிழா நிறைவுற்றது. விழாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.பி. செந்தில்குமார் வீடியோ வைரல் - 4 வழிச்சாலை அமைக்க கிடைத்த ரூ.170 கோடி!

Last Updated : Mar 24, 2023, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details