மயிலாடுதுறை: சசிகலாவின் உறவினர் சிவக்குமார் இல்ல நிச்சயதார்த்த விழா திருவாரூரில் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர், இன்று(மார்ச்.24) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புதன் தலமான திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு கோவிலில் சுவாமி, அம்பாள், புதன், அகோரமூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சட்டசபையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது என்றும், மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து தாங்கள் தலைமை ஏற்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு நிச்சயமாக தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்ஜிஆர் போட்ட விதை - அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா - அவர்கள் வழி வந்த தாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்தார்.