மயிலாடுதுறை: "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" என்ற கம்ப ராமாயணத்தின் வரிகளுக்கு காட்சியமைத்தது போல இருந்தது, இன்று (21.03.2023) மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் கண்ட காட்சி. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில், குமரக்கட்டளை ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாகிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் கும்பாபிஷேகத்திற்காக நடைபெறும் யாக சாலை பூஜையின் போது, யானைகள் காட்டிய பாசப் பிணைப்பு, பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.
யாக சாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யானைகளின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாயூரநாதர் அபயாம்பிகை யானை, திருவையாறு ஐயாரப்பர் கோயில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி ஆகிய மூன்று யானைகள் மீது புனித குடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, மாயூரநாதர் ஆலயத்திற்கு வந்தடைந்தன.
புனித குடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர், அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு, புத்துணர்வு மறுவாழ்வு முகாமில் சந்தித்துக் கொண்ட இந்த யானைகள் இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும், துதிக்கையால் பிணைந்தும், ஆரத்தழுவி முத்தமிட்டு, மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டன.