நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் வடக்கு மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவை சார்பில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நலவாரியத் தலைவர் பொன். குமார் கலந்துகொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு அறிவித்திருந்தாலும், அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிருக்குப் பேறுகால உதவித்தொகை ரூ.6 ஆயிரமாக உள்ளதை ரூ.50 ஆயிரமாகவும், பெண்கள் திருமண உதவித்தொகை ரூ.5ஆயிரமாக உள்ளதை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமான நல வாரியத்தில் உள்ள 3,500 கோடி ரூபாயை சூறையாட தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது. அரசு பணத்தில் அம்மா உணவகத்தை நடத்துவதாக அறிவித்துவிட்டு, கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் உள்ள பணத்தை அபகரிப்பதற்கு, தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர்.
எடப்பாடி அரசின் இந்தத் திட்டத்தைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அந்தப் பணம் தொழிலாளிக்கு மட்டும்தான். இதனை வேறு வழியில் மாற்றக்கூடாது. பெண்களுக்கான உதவிகளுக்குக் கூடுதல் தொகையை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய பொன்.குமார் இதையும் படிங்க: கடலையும் உடலையும் நம்பி பல ஆண்டுகளாக கடல் பாசி எடுத்துவரும் சின்னப்பாலம் பாட்டிகள்!