நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில், உலகத்தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொல்லியல் ஆய்வாளர் ஒடிசா பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது, "உலகம் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் தமிழர்கள். முதலில் உளியை உருவாக்கியவர்கள் என்ற பெருமை படைத்தவர்கள். உலகில் ஓமன், சீனா, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளின் தொல்லியல் சான்றுகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள பழங்குடியின தொல்லியல் சான்றுகளில், தமிழ் இடம்பெற்றுள்ளது. பல காரணிகளால் உலகின் மொழியாக தமிழ் உள்ளது.
மொழி தோன்றி, 40ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 15லட்சம் வருடத்திற்கு முன்பு மொழி தோன்றுவதற்கு முன்பாகவே தமிழர்கள் வாழ்ந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் 200 இடங்களில் ஆயிரத்து 300 பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் டைனோசர், மமூத் யானைகளின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.