நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறும். இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஆரம்பம் முதலே எதிர்த்ததோடு காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.
ராமதாஸுக்குப் பாராட்டு விழா
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் வைத்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
அதனை தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி. அன்புமணி ஆகியோருக்கு வரும் 14ஆம் தேதி மயிலாடுதுறையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.
மருத்துவக் கல்லூரி கோரிக்கை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுபட்டுள்ளதைச் சேர்க்க வேண்டும். காவிரி பாசன வசதிபெறும் அனைத்துப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அரசு அறிவிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு
திருக்கோயிலுக்குப் பிரசித்திப்பெற்றது தமிழ்நாடு. இது தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் காட்டுகிறது. இதனை மத்திய அரசு கையகப்படுத்தினால் அதன் புனிதத்தன்மை கெடும்.
ஆகவே மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய, பழமையான திருக்கோயில்களைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இதனைக் கைவிட வேண்டும். 2002ஆம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் துறை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அறிவித்தபோது அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அறிவுறுத்தல்
2005ஆம் ஆண்டு அதனைக் கைவிட்டது. அந்த நடைமுறையிலிருந்த மூன்று ஆண்டுகள் பராமரிப்பு இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை மத்திய அரசு எடுக்க முயற்சி செய்தபோது கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மத்திய அரசு கைவிட்டது.