மயிலாடுதுறை:ஆஸ்திரேலியாவில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் பில்லிப் ரோட்ரிக்ஸ். சென்னையில் மருத்துவம் படித்த அவர், 1949ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் மருத்துவ சேவையைத் தொடங்கினார். 1955ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார்.
மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டு வண்டியில் சென்று சிகிச்சையளித்துள்ளார். அவர்மீது கொண்ட அன்பினால், மயிலாடுதுறை மக்கள் அவர் பணிபுரிந்த நகராட்சி மருத்துவமனையை “வெள்ளக்காரம்மா ஆஸ்பித்திரி” என்றே அழைத்துவந்தனர்.
கணவர் மறைவுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற அவர் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், மருத்துவர் தினமான நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி மயிலாடுதுறை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவர் பில்லிப் ரோட்ரிக்ஸ் மறைவிற்கு மயிலாடுதுறை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து நகரில் பேரணியாக எடுத்துவந்து அவர் பணியாற்றிய மருத்துவமனைக் கட்டடத்தில் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நினைவஞ்சலி